Thursday, February 14, 2013

உன்னி கிருஷ்ணன் குரலும் ஹரிஹரன் குரலும் ஒன்றா?

சமீபத்தில், கே டிவியில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தைப் பார்த்தேன்.

இந்தப் படத்தின் கதை என்ன? சந்திக்காத, அறிமுகம் இல்லாத ஓர் ஆணின் குரலை விரும்புகிறாள் ஒரு பெண். பார்வை பறிபோன பின்பும், குரல் வழியாகவே அந்த ஆணை அடையாளம் காண்கிறாள்.

ஆனால், படத்தில் நடப்பது என்ன?

எங்கேயோ இருந்து ’இன்னிசை பாடி வரும்’ பாடலை விஜய் பாடுவார். உன்னிகிருஷ்ணன் குரல். சிம்ரனும் அந்தக் குரலை விரும்ப ஆரம்பிப்பார். ரைட்டு.

சிம்ரனின் கவிதை ஆனந்தவிகடனில் வெளியாகும். சிம்ரன் காம்பவுண்டுக்கு அந்தப் பக்கம் இருப்பார். விஜய் இந்தப் பக்கம். கவிதை வெளியானதற்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக ’மேகமாய் வந்து போகிறேன்’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்? எஸ்.பி.பி. போல பாடியிருக்கும் ராஜேஷ் என்கிற புதிய பாடகரின் குரலில். அந்தப் பக்க காம்பவுண்டிலிருந்து இந்தப் பாடலை கேட்கும் சிம்ரன், இது உன்னி கிருஷ்ணன் குரலல்ல. ராஜேஷ் குரல் என்றுதானே நினைத்திருக்கவேண்டும்! ஆனால், அவரோ, தமக்கு மிகவும் பரிச்சயமான குரல், அதாவது உன்னி கிருஷ்ணன் குரலென்று சந்தோஷமாகி அவரும் அழகாக ஸ்டெப்கள் வைத்து ஆடுவார். என்னய்யா நியாயமிது?

சரி போகட்டும். விஜய்யால் சிம்ரனின் பார்வை பறிபோய்விடும். ஒரு திருமண விழாவில், ’இருபது கோடி’ பாடலைப் பாடுவார் விஜய். யார் குரலில்? சிம்ரன் கேட்டுப் பழகிய உன்னி கிருஷ்ணன் குரலிலோ, ராஜேஷ் குரலிலோ அல்ல. புதிதாக ஒருவர், அதாவது ஹரிஹரன் குரலில்! (இதற்கு முன்பு, கோபால் என்றொரு பாடகரின் குரலில் ’பளபளக்குது புது நோட்டு’ என்றொரு பாடலையும் விஜய் பாடுவார். அந்தப் பாடலை சிம்ரன் கேட்காததால் லூஸில் விட்டு விடுவோம்.) ஹரிஹரன் குரலில் ’இருபது கோடி’ பாட்டைக் கேட்கும் பார்வையற்றவரான சிம்ரன், உடனே இது விஜய்தானே பாடுவது என்பதுபோல அக்கம்பக்கத்தில் விசாரிப்பார். அதெப்படி உன்னி கிருஷ்ணன் குரலும் ஹரிஹரன் குரலும் ஒன்றாகும்? சிம்ரன் மேடம், பார்வை மட்டும்தானே போச்சு?

கடைசியில் சிம்ரனுக்குப் பார்வை சரியாகிவிடும். கலெக்டர் ஆகிவிடுவார். கிளைமாக்ஸிலும், விஜய்க்கு தம் குரல் மூலமாகவே அறிமுகப்படுத்திகொள்ளவேண்டிய நெருக்கடி. நல்லவேளை, அப்போது பார்த்து ’இன்னிசை பாடி வரூம்....’ என்று உதித் நாராயணன் பாடவில்லை. முதலில் பாடிய உன்னி கிருஷ்ணனே இந்தப் பாடலையும் பாடுவார். சுபம்.

குரல் வழியாகவே ஹீரோ மீது ஹீரோயின் காதல் கொள்கிறார் என்கிற ஒரு கதையில்தான் இத்தனை ஓட்டை உடைசல்கள்! பாடல், சண்டைக்காட்சிகளில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதற்காக இத்தனை எல்லை மீறல்களா?