Thursday, January 20, 2011

ராஜராஜ சோழனின் வெற்றி!




சென்னைப் புத்தகக் காட்சியில், நான் எழுதியுள்ள ராஜராஜ சோழன் புத்தகம் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. புத்தகக் காட்சியில், கிழக்கில் விற்பனையான நூல்களில், ராஜராஜ சோழன் முதலிடம் பிடித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல், சென்னைப் புத்தகக் காட்சியில் அதிகம் விற்ற ஐந்து புத்தகங்களில் ஒன்று ராஜராஜ சோழன் என தினத்தந்தி, தினமணி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

என் வாழ்வின் மகத்தான தருணம் இது.




புத்தகத்தை இணையத்தில் வாங்க.

Friday, January 07, 2011

தேவை, புத்தகக் காட்சி அருகே ஒரு விமான நிலையம்!


இந்த விஷயத்தைப் போன வருடமே எழுதவேண்டும் என்று நினைத்து அப்படியே மறந்துவிட்டேன். எழுதத்தான் மறந்தேன் என்றால் அப்படி ஒரு விஷயம் நடந்ததையே மறந்ததால் சரியான தண்டனை எனக்கு. என்னை ஒரு பர்லாங்கு நடக்கவைத்துவிட்டது மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

இரண்டுநாள் முன்பு, தெரியாத்தனமாக சென்னைப் புத்தகக் காட்சி வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறி, 'ஒரு பச்சையப்பாஸ் கொடுங்க என்று கேட்டுவிட்டேன். அடுத்தநொடியே ‘எறங்கு சார். அங்கெல்லாம் நிக்காதுஎன்று முகம் சுளித்தார் நடத்துநர்.

புத்தகக்காட்சி வழியாக செல்லும் வண்டிதான் அது. எப்படி நிற்காமல் போகும்? விமான நிலையத்தின் வழியே போகும் அத்தனை பேருந்துகளும் அங்கு சல்யூட் அடித்து நின்று நிதானமாகச் செல்லும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் (அட, சனிஞாயிறில்தான்) ஒரு புத்தகக் காட்சி நிறுத்தத்தில் அதன் வழியே செல்லும் பேருந்துக்கு நிற்காமல் வேறு என்ன வேலை? அரசு உத்தரவு போட மறந்துவிட்டதா? பபாசி விட்டுவைத்திருக்காதே? எங்கு தவறு நடக்கிறது?

சார், அங்க புக்ஃபேர் நடக்குதேஎன்று நடத்துநருடன் மல்லுக்கட்டத் தயாரானேன். அவருடைய குரல் உயர்ந்தது. ஃபுக்பேர் எல்லாம் நிக்காது சார். இறங்குங்க.

சே, போனவருடமும் இதேபோல அவதிப்பட்டேனே என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், திரும்பும்போதும் இந்தப் பிரச்னை விடவில்லை. இரவும் அந்த வழியாகச் செல்லும் மாநகரப் பேருந்துகளில் முக்கால்வாசி புத்தக் காட்சி நிறுத்தத்தில் நிற்கவில்லை.

உண்மையில், சென்னையில் ஓடும் பேருந்துகளில் பெரும்பாலானவை, சொகுசு பேருந்துகள்தான். இது பற்றி கோர்ட்டில் அரசு ஆயிரம்விதமாகச் சமாளித்தாலும் இதுதான் தினமும் நடக்கிற அநியாயம். அப்படிப்பட்ட பேருந்துகள்தான் புத்தகக்கண்காட்சி வழியே நிறைய செல்கின்றன. ஆனால் நிற்பதில்லை. ஒவ்வொருமுறையும் பேருந்தைப் பார்க்கிற மக்கள் அதை நோக்கி ஓடுவதும் பேருந்து விலகிச் செல்வதும் தினமும் நடக்கிற கதையாகிவிட்டது.

இன்று ஒரு நடத்துநரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.

ஏன் சார், பச்சையப்பாஸ்ல பஸ்ஸூ நிற்கறதில்லை. ஃபுக்பேர் நடக்குதே.

ஆமா சார். அதிகாரிங்க அங்க பஸ்ஸூ நிக்கணும்னுதான் சொல்றாங்க. ஆனா நாங்க நிறுத்தறதில்லை. அது அப்படித்தான்..

பச்சப்பாஸூம் முக்கியமான ஸ்டாப்பிங் ஆச்சே

ஏளனமாகச் சிரித்தார். அங்க பஸ்ஸை நிறுத்துனா ஸ்டூடன்ஸ் பஸ்ஸைக் கண்டம் பண்ணிடுவாங்க சார். அதனாலதான் சொகுச யாரும் அங்க நிறுத்தறதில்லை.

தவறு யார் பக்கம் என்று எனக்குக் குழம்பிவிட்டது. ஆனால் ஒன்று. புத்தக் காட்சி நிறுத்தமான பச்சையப்பா கல்லூரி அருகே (அல்லது எதிரில்) ஒரு விமான நிலையம் கட்டப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு உண்டாகும்.

Wednesday, January 05, 2011

தஞ்சாவூர்ல ஒரு ராஜா!


ராஜராஜ சோழன் மற்றும் சோழர்களை மையமாகக் கொண்டு தமிழில் சில புனைவுகள் வெளிவந்துள்ளன. கல்கி, பொன்னியின் செல்வன் வழியாக சோழர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திவிட்டவர். சுஜாதா, காந்தளூர் வசந்தகுமாரனையும் பாலகுமாரன், உடையாரையும் எழுதி தமிழர்களின் மனத்தில் சோழர்களின் வாழ்க்கையை மேலும் பதியவைத்துவிட்டார்கள். செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஊறுகாய் அளவுக்குச் சோழர்களின் வரலாறு தொட்டுக்கொள்ளப்பட்டது. (ஆ.ஒ, ராஜராஜனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தலைப்பு. கி.பி.1000ல் தமிழகத்தை ஆட்சி செய்தவர் அவர். 2000ல் யார் என்று நான் சொல்லவேண்டியதில்லை) ஆனால், ராஜராஜனின் வாழ்க்கையைக் கற்பனையாகப் பார்க்காமல் வரலாறாகப் பார்க்கும் நூல்கள் தமிழில் மிகக்குறைவாகவே உள்ளன.

சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.

இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.

ராஜராஜனிடம் வீரம் இருந்த அளவுக்கு மனிதமும் இருந்ததுதான் அவருடைய அழியாப் புகழுக்குக் காரணம். தன்னை நம்பி இருந்த மக்களுக்குத் தரமான வாழ்க்கையை அளித்திட அவர் உண்மையிலேயே மெனக்கெட்டிருக்கிறார். இன்று, தமிழகத்தில் உள்ள பல ஏரிகள் சோழர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டவை. தமிழக எல்லைத் தாண்டி போரிட்டாலும் அதனால் கிடைக்கப்பெற்றச் செல்வங்களை மீண்டும் தன் மக்களுக்கே வழங்கினார் ராஜராஜன். மக்கள் வங்கி ஒன்றை ஆரம்பித்து புதிய ஆட்சிமுறையை உருவாக்கினார்.மக்கள் அரசனாக அவர் காலத்தில் போற்றப்பட்டிருக்கிறார்.

காலமெல்லாம் சோழர்களின் புகழ்பாடும் தஞ்சைப் பெரிய கோயில் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான். பிற்காலச் சோழர் வரலாற்றில் ராஜராஜனின் தனிச்சிறப்பான பங்களிப்பை. அதன் சமூக, அரசியல் பின்னணியைக் கொண்டு விவரித்துள்ளேன்.

ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.

இணையத்தில் வாங்க.