Thursday, March 10, 2011

கிஉகோ 3 - சென்னை சூப்பர் கிங்ஸ் 11

உலகக் கோப்பைப் போட்டி முடிந்த அடுத்த ஆறாவது நாள் ஐபிஎல் 4 தொடங்குகிறது. இந்தத் தடவை சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் சற்றே கூடியிருப்பதை உணரமுடிகிறது. என் இறுதி 11.

மைக் ஹஸ்ஸி
முரளி விஜய்
சுரேஷ் ரைனா
பத்ரிநாத்
தோனி
ஆல்பி மார்கல்
பிராவோ/ஸ்டிரைஸ்
அனிருத்/யோ மகேஷ்
அஸ்வின்
ஜகாதி
பொலிஞ்சர்/ஹில்பெனாஸ்

ஏழு பேட்ஸ்மேன்களே அதிகம் என்றால் அனிருத்துக்குப் பதிலாக சுதீப் தியாகி. பொலிஞ்சர்/ஹில்பெனாஸ் அணியில் இருப்பதால் குலசேகரா ட்ரிங்ஸ் கொண்டுவரும் சாத்தியமே அதிகம். ஜகாதியின் அருமைபெருமை நீடிக்கும் பட்சத்தில் ரந்தீவுக்கும் வாய்ப்பில்லை. ஆனாலும் தோனியின் நெடுநாள் தோழர் ஜொகிந்தர் சர்மா அணியில் தொடர்ந்து நீடிப்பதுதான் எனக்குக் கிலியை ஏற்படுத்துகிறது.

மாடாய் உழைத்து ரன்களைக் குவிக்கும் முகுந்துக்கு சென்னை அணியில் இடமில்லை. ஹஸ்ஸியால் விளையாடமுடியாத நிலைமையில் அனிருத் ஓபனராகிவிடுவார். முகுந்த், அடுத்த ஷரத் ஆகிவிடக்கூடாது.

(உலகக்கோப்பை மிகவும் போரடிக்கிறது. அதுவும் க்ரூப் ஏ சுத்தம். போட்டி மனப்பான்மையே இல்லை. அதனால்தான் இந்த ஐபிஎல் தாவல்.)

Friday, March 04, 2011

கிஉகோ 2 - சச்சினின் நெ.1 ரசிகர்

எங்கு திரும்பினாலும் கிரிக்கெட்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் உலகக்கோப்பை தொடர்கள், இணையத்தில் மேட்ச் ரிப்போர்ட் பதிவுகள் என்று உலகக்கோப்பையை முன்னிட்டு, தமிழில் நிறைய கட்டுரைகள் சுறுசுறுப்பாக எழுதப்படுகின்றன. சேனல்களில் ஸ்பெக்ட்ரம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. முன்னாள் கிரிக்கெட் புள்ளிகள், நிற்கிறார்களா உட்காந்துகொண்டிருக்கிறார்களா என்று கண்டுபிடிக்கமுடியாத உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து, காலாட்டியபடி, பழைய உலகக்கோப்பை அனுபவங்களை சாவகாசமாக அசைபோடுகிறார்கள். இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர் என்கிற குறும்பேட்டிகளிலிருந்து ஒரு தகவலையும் உருப்படியாகப் பெறமுடியவில்லை.

கிழக்கில், உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்கிற ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.விலை ரூ 50 மட்டும். பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது. இந்த நூலை மிக சுவாரசியமாக எழுதி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. தமிழில் கிரிக்கெட் பற்றி இன்னமும் நிறைய கிரிக்கெட் புத்தகங்கள் வெளிவரவேண்டும். வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த் போன்ற தமிழ்நாட்டு கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும். (ஆனால் கபில்தேவ் சுயசரிதை போல உப்புசப்பில்லாமல் கடனே என்று இருந்துவிடக் கூடாது).

ட்விட்டர் வழியாகத் தென்பட்ட ஓர் ஆங்கில இணையத்தளம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. http://spacemanspiffonthe3rdrock.blogspot.com . கட்டுரைகள் எழுதும் மோஹித் சர்தனா, இந்தியா ஆடுகிற அனைத்து உலகக்கோப்பை ஆட்டங்களையும் நேரில் பார்த்து (அயர்லாந்துடனான இந்தியாவின் ஆட்டத்தையும் மட்டும் குறைத்து எடைபோட்டு டிக்கெட் வாங்காமல் விட்டுவிட்டார்), மைதானத்தில் ஒரு பார்வையாளராகத் தனக்குக் கிடைக்கும் அனுபவங்களை ஒன்றுவிடாமல், விவரமாக எழுதி வருகிறார். மூவர்ணக் கொடியை முகம் உள்பட உடல்முழுக்க வரைந்துகொண்டு இந்தியக் கொடியை வீசியபடி இந்திய மைதானங்கள் தவறாமல் தென்படும் சச்சின் ரசிகரான சுதிர் குமார் கெளதமை மோஹித் பேட்டி கண்டு, சுவாரசியமான தகவல்களைப் பெற்றிருக்கிறார். யாரைவிடவும் அவரே சச்சினின் நெ.1 ரசிகர் என்று சான்றிதழ் அளிக்கிறார் மோஹித். மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்தபிறகு வேண்டுமானால் இப்படி கிரிக்கெட்டே கதி என்று வாழலாம்.