Sunday, March 11, 2012

அடுத்தத் தலைவன்

(இந்த வார கல்கியில் நான் எழுதியுள்ள கட்டுரை இது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுபோல வெளிப்படையான ஒரு தேர்வுக்குழு இருந்தால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். பார்க்கலாம்.)



தோனியின் தலைமேல் கூர்மையான கத்தி. துணைத்தலைவர் பதவிக்கு ஷேவாக், கம்பீர், ரைனா போன்றோர் நியமிக்கப்பட்டபோது தோனிக்கு இவர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால், கோலியைத் துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தியன் மூலமாக இந்திய கிரிக்கெட் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

ஒருவருடம் பின்னே சென்று பார்த்தால், நடந்ததெல்லாம் நம்பமுடியாதவையாகவே இருக்கின்றன. உலகக்கோப்பையை வென்ற அடுத்தச் சில வாரங்களில் ஐபிஎல் கோப்பையையும் இரண்டாவதுமுறையாகக் கைப்பற்றியபோது தோனியைப் பார்த்து கிரிக்கெட் உலகம் உண்மையிலேயே மிரண்டுதான்போனது. தோனி, தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுகூட தலையைக் காப்பாற்றிக்கொண்டுவந்ததால் (டெஸ்ட் தொடரில் 1-1), அழிக்கமுடியாத சக்தியாக விளங்கினார். அடுத்ததாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தையும் சமாளித்துவிட்டால் தோனிக்கு நிகரான ஒரு கேப்டன் இனியில்லை என்கிற நிலை உருவானது. ஆனால், அந்த இடத்தில்தான் பெரிய திருப்பமும் சறுக்கல்களும் ஏற்பட்டன. பெரிய கனவோடு வந்த இந்திய அணியைக் குனியக் குனிய அடித்தது இங்கிலாந்து. டெஸ்ட், ஒருநாள் போட்டி இரண்டிலும் தோனியால் சிறு வெற்றியைக்கூட பெறமுடியவில்லை. முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், தோனியின் போறாத நேரம் போன்றவற்றால் தோல்வி என்றுகூட சமாதானம் சொல்லப்பட்டது. இதற்கடுத்து, ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மிகக் கவனமாக அணுகப்பட்டது. கூடுதலாக, ஒரு பயிற்சி ஆட்டம் நுழைக்கப்பட்டது. காயமடைந்த வீரர்களுக்குத் தேர்வுகள் எல்லாம் வைக்கப்பட்டன. ஆனால், மீண்டும் தோனியை சிறுஎறும்பாக எண்ணவைத்தது ஆஸ்திரேலியா. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் படுகேவலமாகத் தோல்வி கண்டது இந்தியா. தொடர்ந்து முக்கியமான 8 டெஸ்டுகளில் தோல்வி அடைந்தபோதும் தோனியால் இந்திய அணியில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் தொடரில் தோனி சிறப்பாக ஆடியபோதும் படுகுழியிலிருந்த அணியை அவரால் மீட்டெடுக்கமுடியவில்லை. ஒரு கேப்டனாக தோனியின் உபயோகம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், கோலிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி பல தீர்மானங்களை முன்வைக்கிறது.

கோலி, ஒரு பேட்ஸ்மேனாக, சச்சினின் சாதனைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியவராக இருக்கிறார். தனக்கு முன்னால் ஆடவந்த ரைனா, ரோஹித் சர்மாவை கடந்துசென்றுவிட்டார். டிசம்பர் 2006ல், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி மேட்சின் இரண்டாம் நாளின் முடிவில் கோலி அவுட் ஆகாமல் இருந்தார். கடினமான சூழ்நிலையில் அணியை மீட்டெடுக்கவேண்டிய சூழ்நிலை அப்போது. அடுத்தநாள் அதிகாலையில், கோலியின் தந்தை இறந்துபோன தகவல் கிடைத்தது. அணியின் வீரர்கள் கோலிக்கு ஆறுதல் சொல்லவந்தபோது, கோலி சொன்னார், 'நான் ஆடப்போகிறேன்'. அணிவீரர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருமகனாக அவர் செய்யவேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கும். ஆனால், அணிக்காக மைதானத்தில் இறங்கி, 90 ரன்கள் அடித்து அணியை மீட்டெடுத்து, பிறகுதான் தந்தைக்கான இறுதிக்கடமைகளை முடிக்கச் சென்றார். இந்தத் தீவிரத்தன்மைதான் கோலியை இந்திய அணியின் அடுத்தத் தலைவனாக உயர்த்தியிருக்கிறது.

ஆசிய கோப்பைக்கு தோனிதான் கேப்டன். சச்சினும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஷேவாக்குக்கு ஓய்வு மட்டுமே, நீக்கமல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் ஒருவருக்குக்கூட பெரிய பாதிப்பில்லை (காரணம் - ஐபிஎல்). அடுத்ததாக, இலங்கைச் சுற்றுப்பயணம் இருக்கிறது. 2013வரை அமிலச்சோதனை எதுவும் கிடையாது. அந்தவருடம்தான் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது. இந்த நிலையில் தோனியையும் கோலியையும் வாரியம் எப்படி கையாளப்போகிறது?

டெஸ்டில் இனியும் தோனிக்கு இடமில்லை என்று வாரியம் முடிவெடுக்கவேண்டும். பேட்டிங்கும் மோசம், கீப்பிங்கும் சுமார் என்பதால் டெஸ்ட் மேட்சுகளுக்கு தோனி தேவையா என்கிற கேள்வி எழுகிறது. தோனியை விடவும் சஹா கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கீப்பிங்கும் நன்றாகவே செய்கிறார். இந்த நிலையில் தோனிக்காக ஓர் இளைஞனின் எதிர்காலத்தை வீணாக்கலாமா? தோனிக்குப் பதிலாக (குறுகிய காலத்துக்கு) ஷேவாக் அல்லது கம்பீர் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவேண்டும். அதுவரை, கோலியை தயார்படுத்தவேண்டும் (எப்படி கும்பிளே தலைமையில் தோனியைத் தயார் செய்தார்களோ, அதுபோல). ஒருவருடம் கழித்து, கோலி, டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்கவேண்டும். (ஏற்கெனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்குத் தலைமை தாங்கி உலகக்கோப்பையை வாங்கியிருக்கிறார் கோலி. மேலும், ஐபிஎல், ரஞ்சி அணிகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.) 2015 உலகக்கோப்பைக்கு இப்போதிருந்தே இந்திய அணி தயாராவதுபோல், 2013 தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கும் ஒரு திட்டம் வேண்டும். ஆஸ்திரேலியத் தேர்வுக்குழுபோல வெளிப்படையாகவும் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்ட முடியும்.

தாம், வீணாக்கப்படுகிறோம் என்று கோலி எண்ணுவதற்கு முன்பே முறையான பதவிகள் வழங்கப்படவேண்டும். கோலிதான் இந்திய அணியின் நம்பிக்கையான எதிர்காலம்.

நன்றி: கல்கி.

Wednesday, January 11, 2012

இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது?


எழுதுகிறமாதிரிக் கஷ்டம் வேறு ஒண்ணுமில்லை. எல்லோருக்கும் அவர் அவர் தொழில் செய்கிறபோது சந்தோஷம் வேண்டாமா? நாட்டியக்காரியைப் பாருங்க. எவ்வளவு ஆனந்தமாய் ஆடுகிறாள். பாடுகிறவன் கூட சந்தோஷமாய் பாடுகிறான். இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது? எனக்கு மட்டுந்தான் இப்படியா எல்லோருக்குமாண்ணு தெரியலையே!

- கி. ராஜநாராயணன் (தமிழ்நாட்டுக் கிராமியக் கதைகள் தொகுப்பில்).

Tuesday, January 10, 2012

காவல் கோட்டம் - கொலைவெறி ஹிட்!



2012 சென்னை புத்தகக் காட்சியின் ராக்ஸ்டார், சு. வெங்கடேசனின் காவல் கோட்டம்தான்.

சென்ற வருடம், சாகித்ய அகாடமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, 2011 புத்தகக்காட்சியில் 3000 காப்பிகள் விற்றதாகச் சொல்லப்பட்டது. (ஆனால், தினத்தந்தி, தினமணியின் டாப் 5-யில் இதற்கு இடம் கிடைக்கவில்லை). இந்த வருட வசூல் மழை, காவல் கோட்டத்துக்கு.

சாகித்ய அகாடமி விருது, சென்னை புத்தகக்காட்சி போன்றவற்றுக்கு முன்பே காவல் கோட்டம், 3000 காப்பிகள் விற்றுத்தீர்ந்துவிட்டது. எனவே, விருது ஆரவாரத்துக்கு முன்பே புத்தகம் ஹிட்டுதான்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் ஒரே அமளிதுமளிதான். உடனேயே, மதுரையிலிருந்து 1500 ஆர்டர்கள் குவிந்திருக்கின்றன. புத்தகக்காட்சியில் கேட்கவே வேண்டாம். காவல் கோட்டத்தைக் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. நம்பமுடியாத அளவுக்கு, தினமும் 300 லிருந்து 400 காப்பிகள் வரை விற்றுக்கொண்டிருக்கிறது. புத்தகத்தின் விலை, ரூ. 650 என்பதை மறந்துவிடவேண்டாம். இதே ரீதியில் சென்றால், இந்த வருடம் 10,000 காப்பிகள் விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த வருட புத்தகக்காட்சியில், பலத்தப் போட்டி, பொன்னியின் செல்வனுக்கும் காவல் கோட்டத்துக்கும்தான்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/search.php?mode=search&page=1&keep_https=yes

2012 புத்தகக்காட்சி - கிழக்கின் டாப் 10

2012 புத்தகக்காட்சியின் கிழக்கு ஸ்டால்களில், நான் பார்த்தவரையில் கீழ்க்கண்ட புத்தகங்கள் அதிகம் விற்கின்றன.

1. அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் - ஜெயமோகன் - விலை ரூ 20.



இணையத்தில் அதிகம் விவாதத்துக்குள்ளான கட்டுரைகள், இப்போது புத்தகவடிவில். புத்தகக்காட்சியில், 20 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-688-9.html

2. ராஜராஜ சோழன் - ச.ந. கண்ணன் - விலை ரூ. 90.



சென்ற புத்தகக்காட்சியில், அதிகம் விற்ற 5 புத்தகங்களில் ஒன்று எனக் குறிப்பிடப்பட்ட ராஜராஜ சோழன், 2012 புத்தகக்காட்சியிலும் சூப்பர்ஹிட்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-595-0.html

3. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் - அரவிந்தன் நீலகண்டன்




தலைப்பே இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தைச் சொல்லிவிடுகிறது. 2012 புத்தகக்காட்சியிலிருந்து ஸ்டார் எழுத்தாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றிருக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.


4. எக்ஸைல் - சாரு நிவேதிதா - விலை ரூ 250.



கடந்த ஒரு மாதத்தில், அதிகம் பேசப்பட்ட புத்தகம், எக்ஸைல். இதன் அமோக விற்பனை பற்றி பத்ரி எழுதியிருக்கிறார். புத்தகக்காட்சியிலும் ஹிட்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/Charu-Nivedita.html


5. பொன்னியின் செல்வன் ( 5 பாகங்கள்) - கல்கி - விலை ரூ 899.


எப்போதும், புத்தகக்காட்சியின் முதன்மையான ஹீரோ, பொன்னியின் செல்வன்தான். இம்முறை, இன்னும் விசேஷமாக, கிழக்கும் விகடனும் பொன்னியின் செல்வனை வெளியிட்டுள்ளன.

கிழக்கில், பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும் சேர்த்து மொத்தமாக வாங்கினால் ரூ. 899. தனித்தனியாகவும் வேண்டிய பாகங்களை வாங்கிக்கொள்ளலாம். அப்படி வாங்கிச் சேர்த்தால், மொத்தம் ரூ. 1,100/.


6. வில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன் - விலை ரூ 125.



தமிழ்பேப்பர் புகழ் வில்லாதி வில்லன், வெளிவந்த நாள் முதல் சுடச்சுட விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.

7. காஷ்மீர் - பா. ராகவன் - விலை ரூ. 140.



பாராவின் சென்ற வருட சூப்பர்ஹிட் நூல், இந்தப் புத்தகக்காட்சியிலும் தொடர்ந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறது.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-576-9.html


8. தாயார் சன்னதி - சுகா - விலை ரூ. 180




இது, கிழக்கு வெளியீடல்ல. கிழக்கு விநியோகிக்கும் சொல்வனம் பதிப்பகத்தின் புத்தகம். கிழக்கு ஸ்டால்களில், இந்தப் புத்தகத்தை அள்ளிக்கொண்டு போகிறார்கள்.

மூங்கில் மூச்சுக்குப் பிறகு சுகாவுக்கு ஏராளமான வாசகர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுகாவின் மூங்கில் மூச்சு, தாயார் சன்னதி இரண்டுமே இப்புத்தகக்காட்சியின் பெஸ்ட் செல்லர்கள்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/100-00-0000-192-5.html

9. 1 & 2 உலகப்போர்கள் - மருதன் - விலை ரூ 170 & 185





முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் ஆகிய மருதனின் இரு புத்தகங்களும் சென்ற புத்தகக்காட்சியில் சக்கைப்போடு போட்டது. இந்தத் தடவையும் அதிக வரவேற்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முதல் உலகப்போர் - https://www.nhm.in/shop/978-81-8493-587-5.html
இரண்டாம் உலகப்போர் - https://www.nhm.in/shop/978-81-8493-141-9.html

10. உடையும் இந்தியா? - ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் - விலை. ரூ 425.



திராவிடர் கழகம் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?’கூட்டத்தால் இப்புத்தகத்துக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது. அப்படியென்னதான் எழுதியிருக்கிறார்கள் என்கிற ஆர்வத்தை வாசகர்களிடையே தூண்டியிருக்கிறது திராவிடர் கழகம்.

ஆன்லைனில் வாங்க - https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html