Friday, January 07, 2011

தேவை, புத்தகக் காட்சி அருகே ஒரு விமான நிலையம்!


இந்த விஷயத்தைப் போன வருடமே எழுதவேண்டும் என்று நினைத்து அப்படியே மறந்துவிட்டேன். எழுதத்தான் மறந்தேன் என்றால் அப்படி ஒரு விஷயம் நடந்ததையே மறந்ததால் சரியான தண்டனை எனக்கு. என்னை ஒரு பர்லாங்கு நடக்கவைத்துவிட்டது மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

இரண்டுநாள் முன்பு, தெரியாத்தனமாக சென்னைப் புத்தகக் காட்சி வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறி, 'ஒரு பச்சையப்பாஸ் கொடுங்க என்று கேட்டுவிட்டேன். அடுத்தநொடியே ‘எறங்கு சார். அங்கெல்லாம் நிக்காதுஎன்று முகம் சுளித்தார் நடத்துநர்.

புத்தகக்காட்சி வழியாக செல்லும் வண்டிதான் அது. எப்படி நிற்காமல் போகும்? விமான நிலையத்தின் வழியே போகும் அத்தனை பேருந்துகளும் அங்கு சல்யூட் அடித்து நின்று நிதானமாகச் செல்லும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளும் (அட, சனிஞாயிறில்தான்) ஒரு புத்தகக் காட்சி நிறுத்தத்தில் அதன் வழியே செல்லும் பேருந்துக்கு நிற்காமல் வேறு என்ன வேலை? அரசு உத்தரவு போட மறந்துவிட்டதா? பபாசி விட்டுவைத்திருக்காதே? எங்கு தவறு நடக்கிறது?

சார், அங்க புக்ஃபேர் நடக்குதேஎன்று நடத்துநருடன் மல்லுக்கட்டத் தயாரானேன். அவருடைய குரல் உயர்ந்தது. ஃபுக்பேர் எல்லாம் நிக்காது சார். இறங்குங்க.

சே, போனவருடமும் இதேபோல அவதிப்பட்டேனே என்று அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், திரும்பும்போதும் இந்தப் பிரச்னை விடவில்லை. இரவும் அந்த வழியாகச் செல்லும் மாநகரப் பேருந்துகளில் முக்கால்வாசி புத்தக் காட்சி நிறுத்தத்தில் நிற்கவில்லை.

உண்மையில், சென்னையில் ஓடும் பேருந்துகளில் பெரும்பாலானவை, சொகுசு பேருந்துகள்தான். இது பற்றி கோர்ட்டில் அரசு ஆயிரம்விதமாகச் சமாளித்தாலும் இதுதான் தினமும் நடக்கிற அநியாயம். அப்படிப்பட்ட பேருந்துகள்தான் புத்தகக்கண்காட்சி வழியே நிறைய செல்கின்றன. ஆனால் நிற்பதில்லை. ஒவ்வொருமுறையும் பேருந்தைப் பார்க்கிற மக்கள் அதை நோக்கி ஓடுவதும் பேருந்து விலகிச் செல்வதும் தினமும் நடக்கிற கதையாகிவிட்டது.

இன்று ஒரு நடத்துநரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.

ஏன் சார், பச்சையப்பாஸ்ல பஸ்ஸூ நிற்கறதில்லை. ஃபுக்பேர் நடக்குதே.

ஆமா சார். அதிகாரிங்க அங்க பஸ்ஸூ நிக்கணும்னுதான் சொல்றாங்க. ஆனா நாங்க நிறுத்தறதில்லை. அது அப்படித்தான்..

பச்சப்பாஸூம் முக்கியமான ஸ்டாப்பிங் ஆச்சே

ஏளனமாகச் சிரித்தார். அங்க பஸ்ஸை நிறுத்துனா ஸ்டூடன்ஸ் பஸ்ஸைக் கண்டம் பண்ணிடுவாங்க சார். அதனாலதான் சொகுச யாரும் அங்க நிறுத்தறதில்லை.

தவறு யார் பக்கம் என்று எனக்குக் குழம்பிவிட்டது. ஆனால் ஒன்று. புத்தக் காட்சி நிறுத்தமான பச்சையப்பா கல்லூரி அருகே (அல்லது எதிரில்) ஒரு விமான நிலையம் கட்டப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு உண்டாகும்.