Wednesday, January 05, 2011

தஞ்சாவூர்ல ஒரு ராஜா!


ராஜராஜ சோழன் மற்றும் சோழர்களை மையமாகக் கொண்டு தமிழில் சில புனைவுகள் வெளிவந்துள்ளன. கல்கி, பொன்னியின் செல்வன் வழியாக சோழர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திவிட்டவர். சுஜாதா, காந்தளூர் வசந்தகுமாரனையும் பாலகுமாரன், உடையாரையும் எழுதி தமிழர்களின் மனத்தில் சோழர்களின் வாழ்க்கையை மேலும் பதியவைத்துவிட்டார்கள். செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஊறுகாய் அளவுக்குச் சோழர்களின் வரலாறு தொட்டுக்கொள்ளப்பட்டது. (ஆ.ஒ, ராஜராஜனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தலைப்பு. கி.பி.1000ல் தமிழகத்தை ஆட்சி செய்தவர் அவர். 2000ல் யார் என்று நான் சொல்லவேண்டியதில்லை) ஆனால், ராஜராஜனின் வாழ்க்கையைக் கற்பனையாகப் பார்க்காமல் வரலாறாகப் பார்க்கும் நூல்கள் தமிழில் மிகக்குறைவாகவே உள்ளன.

சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.

இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.

ராஜராஜனிடம் வீரம் இருந்த அளவுக்கு மனிதமும் இருந்ததுதான் அவருடைய அழியாப் புகழுக்குக் காரணம். தன்னை நம்பி இருந்த மக்களுக்குத் தரமான வாழ்க்கையை அளித்திட அவர் உண்மையிலேயே மெனக்கெட்டிருக்கிறார். இன்று, தமிழகத்தில் உள்ள பல ஏரிகள் சோழர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டவை. தமிழக எல்லைத் தாண்டி போரிட்டாலும் அதனால் கிடைக்கப்பெற்றச் செல்வங்களை மீண்டும் தன் மக்களுக்கே வழங்கினார் ராஜராஜன். மக்கள் வங்கி ஒன்றை ஆரம்பித்து புதிய ஆட்சிமுறையை உருவாக்கினார்.மக்கள் அரசனாக அவர் காலத்தில் போற்றப்பட்டிருக்கிறார்.

காலமெல்லாம் சோழர்களின் புகழ்பாடும் தஞ்சைப் பெரிய கோயில் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான். பிற்காலச் சோழர் வரலாற்றில் ராஜராஜனின் தனிச்சிறப்பான பங்களிப்பை. அதன் சமூக, அரசியல் பின்னணியைக் கொண்டு விவரித்துள்ளேன்.

ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.

இணையத்தில் வாங்க.