Monday, April 04, 2011

பால் ஹரன் பிரசன்னா


இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று ஹரன் பிரசன்னா என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லி ஒன்றரை மாதங்களாவது இருக்கும். அதாவது, உலகக்கோப்பை தொடங்கும் முன்பு சொன்ன கணிப்பு. இது ஏதோ சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசையாகத்தான் இருக்கிறது என்று அசட்டையாக இருந்துவிட்டேன்.

காலிறுதிப் போட்டியிலேயே தெரிந்துவிட்டது, இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதியில்தான் மோதமுடியும். அப்போதும் அவர் தெளிவாக இருந்தார். காலிறுதியில், ’இண்டியா வில் கிரஷ் ஆஸ்திரேலியா’ என்றபோது அவர் வாய்க்குச் சர்க்கரை போடத் தோன்றியது. செமி ஃபைனலில், இண்டியா வில் கிரஷ் பாகிஸ்தான் என்றார். கிரஷ் என்கிற வார்த்தையை ஒரு வெறியுடன் சொன்னபோது, இந்தியாவின் சாதனை வெற்றியில் எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து காலிறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் யார் பேட்டிங் என்கிற தகவலை வாங்கிவிட்டு நியூசிலாந்து ஜெயித்துவிடும் என்று பட்டென்று கூறிவிட்டார். அணிகளின் தராதரத்தை முன்வைத்துப் பேசுகிறாரா, சும்மா பீலா விடுகிறாரா என்று என்னால் முடிவுகட்ட முடியவில்லை. இந்தியாவிடம் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வி 24 மணி நேரம்கூட ஆகியிருக்காத நிலையில், ஹரன் பிரசன்னாவின் வியூகத்தில் சிக்கிய தென் ஆப்பிரிக்காவும் நியூசிலாந்திடம் மாட்டடி வாங்கித் தோற்றுப் போனது. பாகிஸ்தான், இலங்கை வெற்றிகளையும் போட்டி நடக்கும் ஒருநாள் முன்பே அவர் ஜாதகம் குறித்து வைத்திருந்தார். ஹரன் பிரசன்னா நாக்கில் பிரான்சு பால் ஆக்டோபஸ் குடியமர்ந்து அருள் கூறும் சுவாரசியத்தை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தேன்.

’அரையிறுதியில், இந்தியா வில் கிரஷ் பாகிஸ்தான் அண்ட் ஸ்ரீலங்கா வில் கிரஷ் நியூசிலாந்து; ஃபைனல்ல இந்தியா வில் கிரஷ் ஸ்ரீலங்கா’ என்று நாக் அவுட் முடிவுகளை கிழக்கிலிருந்த அத்தனை பேர் முன்பும் முன்னறிவிப்பாக வெளியிட்டார் பிரசன்னா, துளிகூட பயமோ தயக்கமோ இல்லாமல்.

கரி நாக்கு. ஒன்றுகூட பிசகவில்லை. நியூசிலாந்து காலிறுதியில் ஜெயித்தவுடன், ’அரையிறுதியில் டாஸ் முடிவுகள்கூட சொல்லணும்’ என்று சீண்டிப் பார்த்தேன். ’அரையிறுதியில், நியூசிலாந்தும் இந்தியாவும் டாஸ் வின் பண்ணும். நியூசிலாந்து தோற்கும். இண்டியா வில் கிரஷ்..’. டாஸ் கணிப்புகூட சாட்சாத் பலித்தபோது நான் அரண்டு போய்விட்டேன். இதனால், இறுதிப் போட்டியில், பூனம் பாண்டேவின் நி. ஓட்டத்தை விடவும் ஹரன் பிரசன்னாவின் வாக்கு பலிப்பதில்தான் என் ஆர்வம் மிகுதியாக இருந்தது.

இறுதிப் போட்டியன்று, டாஸ் பற்றிக் கேட்க மறந்துவிட்டேன். பிறகு, டாஸில் சங்ககரா செய்த குழப்பத்துக்கு மேட்ச் ரெஃப்ரி தடுமாறியபோதுதான் ஹரன் பிரசன்னா ஞாபகத்துக்கு வந்தார். இந்தியாவின் சேஸிங்கில், ஆரம்பத்திலேயே ஷேவாக், சச்சினின் விக்கெட்டுகள் வரிசையாக விழ, பயந்துபோய் ஹரன் பிரசன்னாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். ’இண்டியா வில் வின் தி கப்.’ என்று அசராமல் பதில் வந்து விழுந்தது.